Looking For Anything Specific?

ads header

மரியாதைக்குரிய SSP மஜீட் ஐயா அவர்களுக்கு

நான் பெரிதும் மதிக்கும், அன்பு வைத்திருக்கும் எனது மரியாதைக்குரிய SSP மஜீட் ஐயா அவர்களுக்கு, உங்களை விட வயது, அனுபவம், சிந்தனை, பலம் என அனைத்திலும் பலயீனமான தொண்டன் எழுதும் மடல் இது...
நீங்கள் விளையாட்டு, பாதுகாப்பு ,அரசியல் என பல அவதாரங்களில் மிகவும் திறமையாக செயற்பட்டுள்ளீர்கள் என்பதற்கு உங்களைப்பற்றி எனது வாப்பாவினதும் மூத்தப்பாவினதும் வயதையொத்தவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். இன்னும் உங்களைப் பற்றியும் உங்களது பெருமைகள், சேவைகள் பற்றியும் வெளியூரிலிருக்கும் எனது நண்பர்களின் வாப்பாக்கள் பேசவும் கேட்டிருக்கிறேன். இதனால் தான் என்னவோ உங்கள் மீதான பிடிப்பு சிறுவயதுமுதல் இன்றுவரை குறையாமல் இருக்கின்றது...
எமதூர் அரசியல் தலைவர்களில் நின்றும் நீங்கள் சற்று வித்தியாசமானவரும் திறமையானவரும் கூட, இரவுகளில் விழித்திருப்பதற்காக தொண்டர்களுக்கு மது, சிகரட், என எவ்வளவோ வீணான செலவுகளின் மூலம் அரசியல் இலாபம் தேடும் தலைவர்கள் மத்தியில் ,வீண் செலவுகளைத் தவிர்த்து நீங்கள் செய்யும் அரசியலோ தனி அழகு... இருந்தும் உங்களுக்கு முறையான அங்கீகாரத்தை எமதூர் மக்கள் இன்னும் வழங்காமலிருப்பது எனக்கு மிகவும் கவலையும் வேதனையுமளிக்கிறது...
எத்தனையோ பிரபலமான தலைவர்கள் இருக்கும் போது, ஏதாவது ஒரு பிரச்சனை/ சிக்களுக்கான தீர்வை வேண்டி உங்களை நாடி ஏழை பொதுமக்கள் வரும்போது அவர்களிடம் எதையும் எதிர்பாராமல் கூடிய சீக்கிரத்தில் அவர்களின் பிரச்சனைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது... அப்படி உங்களை நாடி வந்தவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பதும் மிக மிக அரிதே...
இருந்தும் எமதூர் மக்கள் உங்கள் மீது திருப்தியடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை, அவர்கள் உங்களைப் பற்றி சில பல குறைபாடுகளை முன் வைக்கின்றார்கள், அதிலும் பிரதானமானவை உங்களுடைய பண மற்றும் உடலசைவுகள் பற்றியவை, நிச்சயமாக வீண், கெட்ட விடயங்களுக்காக பணத்தை இறைத்துத்தான் அரசியல் செய்ய வேண்டுமென மக்கள் விரும்பினால் அப்படியான அரசியலில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டாம், நாளை மறுமையில் எப்படி உழைத்தாய் எப்படி செலவுசெய்தாய் என்ற கேள்விக்குபதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாமெல்லோரும் இருக்கின்றோம்.
உடலசைவில் முதலாவதாக ,நீங்கள் ஊரில் இருப்பது மிகக் குறைவு: இதற்கு நீங்கள்தான் சிறந்த தீர்வொன்றை சொல்ல வேண்டும் தலைவனென்பவன் பொறுப்புகளை ஆடையாயுடுத்தியிருப்பவன் என்பது உண்மை, நீங்கள் மட்டும் தான் தலைவன் உங்களுக்கு மட்டும்தான் பொறுப்புகள் உண்டென்று எடுத்துக்கொள்கிறீர்களா.... அக்கரையூரிலும் தலைவனொருவன் இருக்கிறான் அவன் கொழும்பிலும் இருக்கிறான் சொந்த ஊரிலும் இருக்கிறான், ஆனால் நீங்களோ ஆட்சியின் பின் கொழும்பில் மட்டும்தானே இருக்கின்றீர்கள்... நான் சித்தமிழந்தவன் பேசுகிறேன் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள் அப்படி நினைத்தால் ஊரிலிருக்கும் அனைவரையும் சித்தமிழந்தவர்களாக்கிவிடுவீர்கள்....
இரண்டாவது, உங்களுடைய தேர்தல் பிரச்சார முறைமை : ஊரின் பிரதானமான அமைப்புகளான, உலமாசபை, பள்ளிவாசல் நிருவாகங்கள், வர்த்தக சங்கள், இளைஞர் அமைப்புகள், கிராம அபிவிருத்தி அமைப்புகள், சமூக சேவை அமைப்புகளின் ஆலோசனையுடன் உங்களது பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்திருக்க வேண்டும் என்பது பலருடைய ஆதங்கம், எங்கள் ஊரவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் போது எங்களது வாக்கு அவருக்கே சென்றடைய முயற்சிப்போமென்று அவர்கள் கூறி உறுதியளித்திருப்பார்கள் காலம் இன்னுமுள்ளது முடிந்தால் அவர்களை சந்தித்து உரையாட முயற்சிசெய்யுங்கள்
அரசியலென்பதும் ஒரு வகை முதலீடுதான், வீடு வீடாகச் சென்று வயதானவர்கள், நோயாளிகள், சிறுபிள்ளைகள், இளைஞர்கள் என எல்லோருடைய தலைகளையும் கோதி அரசியல் செய்யும் எத்தனையோ தலைவர்களைப் பார்த்திருக்கிறேன், மூத்தம்மா மார்களுக்கு வெத்திலை பாக்கு நறுக்கிக் கொடுத்து அவர்களுடன் உரையாடி அரசியல் செய்த தலைவர்களும் இருக்கிறார்கள். உள்ளூராட்சி தேர்தலுக்கே வீடுவீடாகச் சென்று வாக்களிக்கக் கோருபவர்கள் இருக்கும் இக் காலகட்டத்தில் ஒரு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் நீங்கள் இதுவரை வீதிக்கு இறங்காமல் இருப்பது பெரும் கவலையைத் தருகின்றது.
உங்களுடன் சதா நேரமும் இருப்பவர்கள் உங்களுக்கு சிறந்தொரு வாக்குவங்கியாக செயற்படுபார்கள் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள், ஊருக்குள் கதை வேறு.... தினமும் நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் உங்களுக்கு வாக்களிக்கக் கோருகிறேன்... அவர்களோ என்னை நோக்கி விடையளிக்க முடியாத பல வினாக்களைத் தொடுக்கின்றார்கள், சின்னப் பயள் நான் எப்படி அக் கடினமான வினாக்களுக்கு விடை சொல்லுவேன்... மறுபடியும் சொல்கிறேன் ஊருக்குள் கதை வேறு
இன்று நடந்த சம்பவத்தை எண்ணி, முஸ்லிம் காங்கிரசுக்கு இங்கு இடமில்லை, எல்லோரும் நமக்குத்தான் வாக்களிக்க வேண்டும் / வாக்களிப்பார்கள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள், காங்கிரஸ் தலைவர் மீது கொண்ட வெறுப்பின் வெளிப்பாடே தவிர மற்றப்படி ஒன்றுமில்லை.
என் அன்புக்குறியவரே தயவுசெய்து நிலைமைகளை அலசி ஆராய்ந்து ஒழுங்கான முறையில் திட்டமிட்டு .... இன்னும் எவ்வளவோ சொல்லலாம் மூத்தவர் , அனுபவம் நிறைந்தவர் நீங்கள் மக்கள் விரும்பும் சிறந்ததொரு பிரச்சார நடவடிக்கையை முன்னெடுங்கள் நான் / நாங்கள் உங்களுடன் கைகோர்க்க காத்திருக்கிறோம்...
இப்படிக்கு
உங்களைத் தலைவனாகப் பார்க்க ஆசை கொண்ட தொண்டன்....

Post a Comment

0 Comments