Looking For Anything Specific?

ads header

இரண்டு வகை மனிதர்கள்...

மனிதர்கள் யாவரும் ஒரே பண்புகள், ஒரே சிந்தனைகள் கொண்டவர்கள் கிடையாது, அப்படியிருந்தால் இவ்வுலகத்தில் சுவாரஷ்யம் என்பது இல்லாமல் போய்விடும். குறுகிய கால இவ்வுலக வாழ்க்கையை சந்தோஷமாகவும், ஏனையவர்களுக்குப் பிடித்ததாகவும் பிரயோசனமுள்ளதாகவும் வாழும் போதுதான் இவ்வுலக வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படுகின்றது. சிலர் இப்படித்தான் வாழவேண்டும் என தங்களுக்குள் ஒரு வரைமுறையை ஏற்படுத்தி வாழ்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்களது அன்றாட செயற்பாடுகளுக்கென ஒரு வடிவத்தை/உருவத்தை/முறைமையை ஏற்படுத்தி அதன்படிதான் செயற்படுவார்கள். இவர்களை அவதானிக்கும் போது இவர்களின் உடையுடுத்துதல்  அல்லது உணவு உண்ணுதல் அல்லது பிறரிடம் அனுகுதல்,பழகுதல் இன்னும் பிற கொடுக்கல் வாங்கல்கள் என ஒவ்வொரு செயற்பாடுகளும் மிகவும் நாகரீகமானதாகவும், தூய்மைத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டுமென்பதற்காக அதிக சிரத்தையெடுத்துக் கொள்வார்கள்.

குடும்பம் , உறவினர்களிடத்தில் உறவாடுதல், குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்குதல், நண்பர்கள் சந்திப்பு, டீவி, சினிமா இன்னும் பிற பொழுதுபோக்குகள், அதிகாலையில் தூக்கத்தை விட்டெழல், இரவில் நித்திரைக்குச் செல்லல் என ஒவ்வொன்றையும் நேர அடிப்படையிலேயே செயற்படுத்துவார்கள். இன்னுமிவர்கள் தங்கள் சந்தோஷம், துக்கம், பாராட்டுதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதுக்குக் கூட தான் இருக்கும் சூழலை அவதானிக்கக் கூடியவர்களாக இருப்பர். 

மேலுமிவர்கள் தங்களது எதிர்கால செயற்பாடுகள் பற்றி மிகவும் துள்ளியமாகத் திட்டமிட்டு செயற்படுவார்கள். இப்படிப்பட்டவர்களின் பெரும்பாலான திட்டமிடல்கள் வெற்றியை நோக்கியே நகர்ந்து செல்லக் கூடியதாகவிருக்கும். மேலும் இவர்களது சமூகத்துடனான தொடர்பினை நோக்கும் போது குறிப்பிட்ட ஒரு வகையினரோடுதான் இவர்கள் தொடர்புவைத்திருப்பார்கள் அதுவும் அவர்களின் தொழில் அந்தஸ்து அல்லது  படிப்போடு தொடர்புடையதாகவேயிருக்கும்.  

இப்படியானவர்கள் தாங்கள் சந்தோசமாக இருப்பதாக சமூகத்தின் ஏனைய படிகளில் இருப்பவர்களுக்குக் காட்டிக்கொள்வார்கள். உண்மையும் அதுதான் அவர்களுக்கென அவர்கள் கீறிக்கொண்ட வட்டத்தினுள் அவர்கள் வாழும்போது அதைவிட சந்தோஷம் வேறொன்றுமில்லை. அவர்களின் வாழ்வை இப்படியாக அமைத்துக்கொள்வதில் அவர்களுக்கு கொள்ளை சந்தோஷம், அப்படி வாழ்வது ஒரு வகை சுவாரஷ்யத்தைத் தருகிறதென்றால், இன்னுமொரு வகையினர் இருக்கின்றார்கள்

இவர்கள் எப்படி வாழ்ந்தாலும் சரிதான் எனும் கொள்கை கொண்டவர்களாக இருப்பார்கள், இவர்களது அன்றாட செயற்பாடுகளில் தூய்மைத்துவம் என்பது குறைவாகவிருக்கும். இவர்களிடத்தில் தங்களுக்கென ஒரு முறையான கொள்கையிருக்காது, தான் திட்டமிட்ட செயற்பாடுகளை செயற்படுத்தி சமயங்களில் பாதியிலேயே விட்டுவிடுவார்கள், எல்லோரிடத்திலும் மிகவும் சாதாரணமாகப் பழகுவார்கள், இவர்களின் வீடு இவர்கள் வசிக்கும் அறைகளை நோட்டமிட்டால் பொருட்களெல்லாம் சிதறி ஒரு ஒழுங்கற்ற முறையில், இன்னும் சொல்லப் போனால் இப்போதைய இளைஞர்களின் அறைகளைப் போன்று காணப்படும்.

முன்னர் கூறிய வகையினருக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே இவர்களது நடத்தைகள் இருக்கும். இன்னும் சமூகத்தில் சகல தரப்பினர்களிடத்திலும் தொடர்புவைத்திருப்பார்கள். பல சுவாரஷ்யமான நினைவுகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்வில் பிறர் சொல்லிக்கொள்ளுமளவுக்கு முன்னேற்றமென்பது இருக்காது ஆனால் இவர்களுக்குள்ளாகவே முன்னேற்றமைடந்திருப்பார்கள்,லைப்ரரி, இணையம் போன்றவற்றில் நேரமிடுவது குறைவாகவேயிருக்கும், ஆனாலும் புராதண, சமகால உலக நடப்புக்களில் பரீட்சையில் தேறுமளவுக்கு தெரிந்துவைத்திருப்பார்கள்.

இவர்கள் வசிக்குக் அறை, மொபைல் போன், கொம்பியூட்டர், பேர்பியூம், ஸ்லீப்பர்ஸ் போன்றவற்றை யார் வேண்டுமானும் பாவிப்பதற்கு அனுமதிப்பார்கள். அரசியல், சமூக சேவை போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் வீண்விரயத்துக்குப் பெயர்போன இவர்களின் வாழ்வும் மிகவும் சந்தோசமானதாகவிருக்கும்,  முரண்பாடு கொண்ட இரு வகை மனிதர்களின் செயற்பாடுகள் ஒன்றாகவிருந்த போதிலும் அதை செயற்படுத்தும் விதத்தில் தான் வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வித்தியாசங்கள்தான் வாழ்வினை சுவாரஷ்யமானதாக்குகின்றது. மேலும் இரு வகையினரும் தாங்கள் இருப்பது போன்றே வாழ்வின் இறுதிவரை இருந்தால் பிரச்சனையில்லை, இரண்டாம் வகையினர் முதல் வகையினர் போன்று நேரம் மற்றும் ஒழுங்கு முறையில் அமைந்த (தூய்மைத்தன்மையான) செயற்பாடுகளைச் தன் வாழ்வில் கொண்டுவருவதற்கும், முதல் வகையினர் இரண்டாம் வகை போன்று சமூகத்தோடு ஒன்றித்து வாழ்வதற்கும் முயற்சிக்கும் போதுதான் பிரச்சனைகள் எழுகின்றன. அப் பிரச்சனைகளும் வாழ்வை சுவாரஷ்யமாக்குமென்பது வேறுவிசயம்.

இவ்விரண்டு வகையினரும் ஒரே குடும்பத்தில், ஒரே விட்டில் வாழ்ந்தால் இன்னும் சுவாரஷ்யமாகவிருக்கும்.





Post a Comment

2 Comments

  1. தண்டவாளங்கள் போல... ஒழுங்காக இருந்தால் வாழ்க்கை எனும் பயணம் இனிதே...

    ReplyDelete
  2. // இவ்விரண்டு வகையினரும் ஒரே குடும்பத்தில், ஒரே விட்டில் வாழ்ந்தால் இன்னும் சுவாரஷ்யமாகவிருக்கும்.//

    எத்தனையோ குடும்பங்களில் நட்க்கிறது
    !

    ReplyDelete