Looking For Anything Specific?

ads header

பொழுதுபோக்குகளும் புத்திசாலித்தனமும்

பொழுதுபோக்கு இந்த வார்த்தைக்கு அடிமையாகாத  மனிதன் இல்லையேன்றே சொல்லலாம். சிறு குழந்தை முதல் வயோதிபத்தை ருசித்துக் கொண்டிருப்பவர்கள் என எல்லோருக்குமே பொழுதுபோக்கு அவசியமானதாகவிருக்கின்றது. நீந்துதல், செஸ் விளையாடுதல், புத்தகம் படித்தல்,வீடியோ கேம்ஸ் விளையாடுதல், புகைப்படமெடுத்தல், நல்ல சினிமாக்களை பார்த்தல்,மீன் பிடித்தல், குழந்தைகளோடு பொழுதைக் கழித்தல் என இப்படி நீண்டதொரு  பட்டியலை பொழுதுபோக்கினுள் அடக்கலாம் . இவற்றில் எது பிரயோசனமானது, அறிவை வளர்க்கக் கூடியது எது பிரயோசனமற்றது என்றெல்லாம் நாம் கவனிப்பது கிடையாது. காரணம் எப்படியோ எமது ஓய்வு நேரம் கழிந்தால் சரி என்ற எண்ணத்தில் நாம் இருப்பதனாலாகும்.

எம்மில் சிலர் தொலைக்காட்சிகளில் முகம் புதைத்தும், வீண் பேச்சுக்களிலும் தங்கள் ஓய்வு நேரங்களை விரயம் செய்கின்றனர் என்பதனையும் ஞாபகப் படுத்திச் செல்கின்றேன்.

நாம் உட்பட நமது குழந்தைகளுக்கு பிரயோசனமானதும் அறிவை வளர்க்கக் கூடியதுமான பொழுதுபோக்குகளைப் பற்றி அறிந்துவைத்திருந்தால் எதிர்காலத்தில் எமது நுண்ணறிவு, பொது அறிவை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு துணையாக இருக்கும். என்னடா இவன் பொது அறிவு , நுண்ணறிவு என்றெல்லாம் கதைக்கிறானென்று வேற மாதிரி என்னை எடை போட வேண்டாம். பொழுது போக்குக்குத் தான்  எழுதுகிறேன். நாலு பேருக்கு உதவியதென்றால் சின்னதாய் ஒரு மனதிருப்தி கிடைக்கும். இங்க எல்லோரும் சொல்லுவாங்களே நாலு பேருக்கு நல்லது நடக்குமென்றால் எதுவும் செய்யலாமென்று அது போலதான் இதுவும் :). எமக்குப் பிரயோசனப்படுமென்று சொல்லப்படுகின்ற ஒரு சில பொழுது போக்குகளை குறிப்பிடுகிறேன்.

பிற நாட்டு மொழிகளைக் கற்றுக் கொள்ளுதல் 

இது பொழுதுபோக்காக அமைவது மட்டுமல்லாமல் எமது மொழியியல் திறனை வளர்த்துக் கொள்ளவும் உதவியாய் இருக்கும். எப்போதுமே ஒரே கலாச்சாரம் ஒரே சமூகம் என்றில்லாமல் பல மொழிகளை அறிவதன் மூலம் அவ் மொழிகளைப் பேசக்கூடிய சமூகங்களின் பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், வரலாறுகள் போன்றவற்றை எம்மால் அறிய முடிவதுடன் வித்தியாசமான ஒரு அனுபவத்தினையும் பெற்றுக் கொள்ளலாம். எமது குழந்தைகளுக்கு இந்த பொழுது போக்கின் நன்மைகளை எடுத்துச் சொல்லி குழந்தைப் பருவத்திலேயே பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக அவர்களை மாற்றினால் அவர்களின் நட்பு வட்டம் கடல் கடந்ததாய் அமைந்து விடுவதுடன், பல மொழிகளிலுமுள்ள புத்தகங்களையும், வலைத்தளங்களையும் படிக்கக் கூடியதாய் இருக்கும்.

வீடியோ கேம்ஸ் விளையாடுதல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கும் சாதனமாக இவைகள் இருக்கின்றன. ஒரு வகையில் வாழ்க்கைப் பயிற்சி என்றே இதனை எடுத்துக் கொள்ளலாம். இதில் எல்லா வகையான கேம்ஸ் ளையும் சொல்ல முடியாது. உள்ளத்தில் வன்முறைகளைத் தோற்றுவிக்கக் கூடிய கேம்ஸ்களைத் தவிர்த்தல் நல்லது. எமது செயற்பாடுகள், பார்வை போன்றவற்றை ஒருங்கிணைத்து ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதற்கு ஏதுவாய் இவைகள் அமையும். புதிய சிந்தனைகள் ,மாற்றுவழிகள் போன்றவைகளை விரைவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

புதிர்கள்

புதிர்கள் பிடிக்காதவர்கள் யாருமேயில்லை. மிகவும் சுவாரஷ்யம் மிகுந்த பொழுதுபோக்கு. சிறு வயதுகளில் பத்திரிகைகளில்  கண்டிருப்போம் குறுக்கெழுத்துப் போட்டியாக. சில வகைப் புதிர்கள் எரிச்சலூட்டக் கூடியவைகளாகவும் இருக்கும். அவைகளில் கொஞ்சம் அதிக கவனம் எடுப்போமேயானால் இறுதி வரை தீர்வு காணாமல் விட்டுச் செல்ல மனம் இடமளிக்காது. பிரயாணங்களின் போது நல்ல துணையாக இருக்கும் பொழுதுபோக்காக இருப்பது மட்டுமல்லாமல் எந்தவொரு விடயத்தையும் அதன் சாதக, பாதக விடயங்களை முன்னிறுத்தி அனுகுவதற்கு அடிப்படையாய் அமையும்.

நாணயங்கள் மற்றும் ஏனைய பொருட்களை சேகரித்தல் 

நிச்சயமாக இன்னுமொரு சிறந்த பொழுதுபோக்காக இதை நான் கூறுவேன். எம்மைச் சுற்றியுள்ள உலகு பற்றி மேலும் பல சுவாரஷ்யமான தகவல்களைப் பெறக் கூடியதாக இருப்பதுடன் சில சமயங்களில் எதிர்கால வரலாற்றில் எமது பெயரை இடம் பெறச் செய்யக் கூடியதாகவும் அமைந்துவிடும். அரிய வகை நாணயங்கள், முத்திரைகள், மற்றும் பிற பொருட்களை சேகரிப்பதன் மூலம் அவை பற்றிய தகவல்களை தேடி அறிந்துகொள்ள முடிவதுடன் முன்னோர்களின் வரலாற்றுக்கு உயிரூட்டியதாகவும் அமைந்துவிடுகின்றது. அரிய பொருட்களை சேகரிக்கும் ஆசை மேலும் மேலும் அதிகரிக்குமானால் அது தொடர்பான மேற்படிப்புகளை படிப்பதனூடாக இந்த உலகத்தை அரச செலவுகளினூடே சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பமும் கிட்டும்.

வாசிப்பு

சந்தேகத்திற்கிடமில்லாமல் மிகவும் அழகான பொழுதுபோக்காக வாசித்தலை எடுக்கலாம். கோடிக்  கணக்கான புத்தகங்கள் பல மொழிகளிலும் உள்ளன. ஒரு மனிதன்  இதுவரை இவைகளில் 1 வீதத்தையேனும் தன் வாழ்நாளில் வாசிக்கவில்லையென்றும் சொல்லப்படுகின்றது. நான் முதலாவதாக குறிப்பிட்டிருக்கும் பொழுதுபோக்கிற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. நாம் சிறந்த மனிதனாக இருப்பதற்கு வாசித்தல் பிரதானமாய் அமைகின்றது. இந்த உலகோடு நாம் பேசக்கூடிய ஒரு ஊடகமாக வாசித்தலை கொள்ளலாம்.

கிறுக்குப் பயல் ஏதோ சொல்லிட்டுப் போறான் என்று விட்டு விடாமல். நீங்களும் ஏதாவது சொல்லிட்டுப் போங்களேன் :)




Post a Comment

3 Comments

  1. வலையுலகில் நீங்க இருக்குறீங்களா...?

    நன்றி...

    ReplyDelete
  2. 5 நிமிடத்திற்குள் உங்கள் தளம் முழுவதும் திறந்தால் ஸ்பெஷல் பரிசு உண்டு...!

    09944345233
    dindiguldhanabalan@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது உயிருடன் இருப்பதை இப்படித்தான் நிருபிக்கவேண்டியிருக்கிறது,,,

      தகவலுக்கு நன்றி சார்

      Delete